புன்னக்காயலில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் உள்பட திருச்செந்தூர் வட்டத்தில் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு பயனாளிகளுக்குக் கடன் உதவிகளையும் வழங்கினார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக் கூடத்திற்கான கட்டடத்தின் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு அதன் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், குழந்தைகளின் எடை, உயரம், கற்றல் திறன் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், இதே கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உபயோகக் கட்டடப் பணிகளையும் பார்வையிட்டார்.
ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற ஆட்சியர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் பணிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆறுமுகநேரி இ.இ.418 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கியில் கூட்டுறவு மருந்தகம் மற்றும் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்.


