தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, தடை செய்யப்பட்ட நேரங்களில் விதிமுறைகளை மீறிப் பிரதான சாலைகளில் நிறுத்தப்பட்ட 4 கனரக வாகனங்களைப் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகருக்குள் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை நேரங்களில் சில கனரக வாகனங்கள் பிரதான சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டுச் சரக்குகள் இறக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகங்களுக்குச் செல்லும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரிலும், டவுன் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின் படியும், மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி பிரதான சாலையில் அதிரடிச் சோதனை நடத்தினார்கள்.
அப்போது தடை நேர விதிமுறைகளை மீறிச் சாலைகளில் நிறுத்தப்பட்டு, கடைகளில் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த 4 கனரக வாகனங்களைக் காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதோடு, விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான அபராதத் தொகையும் விதிக்கப்படும் எனப் போக்குவரத்துப் காவல் ஆய்வாளர் சுணை முருகன் எச்சரித்துள்ளார்.


