தூத்துக்குடி மாநகரில் இரண்டு ரயில்வே கேட்களையும் ஒரே நேரத்தில் மூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து மக்கள் நல கூட்டமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி முதல் கேட் மற்றும் இரண்டாம் கேட் ஆகிய இரண்டு ரயில்வே கேட்களும் ஒரே நேரத்தில் மூடப்படுகின்றன. பொதுமக்கள் மணிநேரக் கணக்கில் சாலைகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் காலதாமதம் ஆகிறது.
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் அவசரச் சிகிச்சை வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. நகரின் முக்கியப் பிரதான சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்கள் தினமும் ஏற்படுகின்றன. இரண்டு ரயில்வே கேட்களுக்கும் ஒரே சிக்னல் இணைப்பாக இருப்பதை மாற்றி, உடனடியாகத் தனித்தனி சிக்னல் அமைப்பை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றத் தவறினால், தூத்துக்குடி மக்களைத் திரட்டி மிக விரைவில் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ரயில்வே நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரம் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


