தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாகப் பிரதான நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலக் கட்டுமானப் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விபத்து அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி – திருநெல்வேலி பிராந்திய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகப் பகுதியானது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் மிக முக்கிய மையமாகும். இப்பகுதியைச் சுற்றியே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் இந்தச் சாலையைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். தற்போது இப்பகுதியில் பிரம்மாண்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றிலும் எவ்வித பாதுகாப்புத் தடுப்புகளோ அல்லது எச்சரிக்கைக் குறியீட்டு உபகரணங்களோ அமைக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கனரகக் கிரேன் வாகனமானது, எவ்வித வழிகாட்டி உதவியாளர் இல்லாமலும், முறையான ஒர்கிங் ராக்கர்ஸ் மற்றும் ஆபத்துக்கால எச்சரிக்கை விளக்குகள் ஏதுமின்றியும் மிகவும் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், இத்தகைய அஜாக்கிரதையான செயல்பாடுகளால் எந்த நேரத்திலும் பெரிய அளவிலான கொடூர விபத்துக்கள் நேரிடலாம் என்ற அசாதாரண சூழ்நிலை இப்பகுதியில் நிலவுகிறது.
இது குறித்துப் பொதுமக்களின் சார்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ச. பாலா @ பாலசந்தர் விடுத்துள்ள கோரிக்கையில், “ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து செல்லும் மாவட்டத்தின் முதன்மைச் சாலைப் பகுதியில், எந்தவொரு உள்கட்டமைப்புப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலப் பணிகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
அசம்பாவிதம் மற்றும் விபத்துக்கள் எதுவும் நடைபெறுவதற்கு முன்பாக, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு, பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பணியிடத்தைச் சுற்றித் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அமைத்து, பொதுமக்களின் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


