தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு குறித்து பொதுமக்கள் புகார்களைப் பதிவு செய்ய 1800 203 0401 என்ற புதிய ‘டோல் ஃப்ரீ’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சி 60-வார்டுகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் தங்கு தடையின்றிப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இச்சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பராமரிப்புப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டால், பொதுமக்கள் தங்கள் வார்டு கவுன்சிலர்கள் அல்லது அலுவலகங்களைத் தேடி அலைவதைத் தவிர்க்கும் பொருட்டுப் புதிய தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்ய 1800 203 0401 என்ற பிரத்தியேகக் கட்டணமில்லாத் தொலைபேசி வசதி மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை, தெருவிளக்குகள் எரியாத அவலம் அல்லது சாக்கடைத் தேக்கம் போன்ற எவ்விதப் பிரச்சினைகள் இருந்தாலும், பொதுமக்கள் உடனடியாக மேற்படி டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது உத்தியோகப்பூர்வப் புகார்களைப் பதிவு செய்து விரைவான தீர்வினைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா தெரிவித்துள்ளார்.


