சீமான் – கயல்விழி தம்பதிக்கு அண்மையில் பிறந்த பெண் குழந்தையை நேரில் சந்தித்து, பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்கச் சீர்வரிசை தட்டுகளுடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் மாவீரன் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கயல்விழிக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாகப் பெண் குழந்தைக்குத் தந்தையான சீமானுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் பெண் குழந்தைக்குச் சிறப்புச் சீர் கொண்டு வந்துள்ளார். தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திரண்டு வந்த அவர், பல தாம்பூலத் தட்டுகளில் பழங்கள், இனிப்புகள் மற்றும் மங்கலப் பொருட்களுடன் சீர்வரிசைகளை அடுக்கிக் கொண்டு வந்தார்.
அதிமுக, திமுக எனப் பல தசாப்தங்களாகத் தென் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தி வரும் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை போரூர் பகுதியில் உள்ள சீமானின் இல்லத்திற்குத் தாரை தப்பட்டை மற்றும் மேளதாள வாத்தியங்கள் முழங்கச் சீர் கொண்டு வந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் திருவிழாக் கோலத்தை ஏற்படுத்தியது. வாசலில் மேளதாளங்கள் முழங்குவதைக் கேட்டு, சீமான் தனது வீட்டின் வெளியே நேரடியாக வந்து அனிதா ராதாகிருஷ்ணனை நெகிழ்ச்சியோடு கட்டித்தழுவி வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, சீமானின் மகளைக் கைகளில் ஏந்தி வாழ்த்திய அனிதா ராதாகிருஷ்ணன், தனது சொந்தக் கையாலேயே அக்குழந்தைக்குத் தங்கச் செயின் அணிவித்து மகிழ்ந்தார். பின்னர் சீமான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு அவர் விடைபெற்றார். மேடைகளிலும் தேர்தல் களங்களிலும் அரசியல் ரீதியாகக் கடுமையான விவாதங்களை முன்வைத்துக் கொண்டாலும், குடும்ப நிகழ்வுகளில் எல்லையைக் கடந்து தூத்துக்குடிப் பிராந்தியப் பாரம்பரிய முறைப்படி அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


