தூத்துக்குடியில் கல்லூரி அருகே சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி – மதுரை ரோட்டில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பெண்கள் கல்லூரி அருகே சட்டவிரோதப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31) என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து சுமார் 42 கிலோ எடையுள்ள கணேஷ் புகையிலை, கூலிப் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், பணம் ரூ. 35,000 மற்றும் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து முனியசாமி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காகச் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


