உலகையே அதிர வைத்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட 9 போலீஸ் அதிகாரிகளுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசு மதுரை நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19 அன்று, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசாரைக் கைது செய்தது. விசாரணையின் போதே சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேர் மீதான வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், கடந்த மார்ச் 23 அன்று 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
தண்டனை குறித்த வாதங்களின் போது, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இது திட்டமிட்டு நடத்தப்பட்ட “காவல் மரணம்” ஆகும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த அநீதியைச் செய்துள்ளனர்.
இது அரிதினும் அரிதான வகையைச் சார்ந்தது என்பதால், குற்றவாளிகளுக்கு எவ்விதக் கருணையோ, பாரபட்சமோ காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளிகள் தரப்பில், “இது திட்டமிடப்பட்ட கொலை அல்ல, ஆத்திரத்தில் நடந்த சம்பவம்” எனக் கூறி குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதித் தண்டனை விவரங்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி அறிவிக்கவுள்ளார்.
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, காவல் துறையினரின் அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


