தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்கள், இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத் தொகையை ₹25,000-லிருந்து ₹50,000-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 18 முதல் 60 வயதிற்குட்பட்ட, வாரியத்தில் பதிவுபெற்ற உலமாக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக, துறையின் உரிய ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும்.
கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் 13.03.2026-ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


