பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு வருகிற 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், பணியில் இருக்கும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் ஆசிரியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். தேர்வு எழுத விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்குச் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தத் தமிழக அரசு முடிவு செய்தது. ஆசிரியர் சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க அரசு முன்வந்தது. அதற்கான முறையான உத்தரவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணை:
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியுள்ள ஆசிரியர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: பிப்ரவரி 18 (புதன்கிழமை)
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 10
தகுதித்தாள்-1 தேர்வு நாள்: ஜூலை 4
தகுதித்தாள்-2 தேர்வு நாள்: ஜூலை 5
பொதுவான தேர்வர்களின் நிலை: இந்த அறிவிப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்துமா என்ற கேள்வி மற்ற தேர்வர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த தெளிவான விளக்கம் இந்த அறிவிப்பில் இல்லை என்றாலும், வழக்கமான டெட் தேர்வு அறிவிப்புகள் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்பட்டு, தேர்வுகள் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.


