காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமநாயக்கன்பட்டியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம். மேலும் உங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழாவில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


