தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டு 3-வது மாடியில் ஜன்னல் சிலாப் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். பலர் உள்நோயாளியாக தங்கியும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் மகப்பேறு வார்டு தனியாக அமைந்து உள்ளது. நேற்று மதியம் இந்த வார்டின் 3-வது மாடியில் உள்ள ஒரு ஜன்னலின் சிலாபில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
நோயாளிகள், டாக்டர்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் சிமெண்ட் பூச்சு கட்டிகள் விழுந்தன. அப்போது இந்த பகுதியில் நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உடைந்த பகுதிகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


