பி. லீலா என அழைக்கப்படும் பொறயாத்து லீலா (19 மே 1934 – 31 அக்டோபர் 2005) பிரபலமான தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவருக்கு 2006 ஆம் ஆண்டு இறப்பிற்குப் பின்னர் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
பி. லீலா கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது கடைசி மகளாக பிறந்தார். சாரதா, பானுமதி என்ற இரு அக்காள். அப்பா மேனன் ராமவர்மா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். லீலாவுக்கு மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான இசைப் பயிற்சி அளித்தார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பல மேதைகளிடம் பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
12 வயதில் ஆந்திர மகளிர் சபையில் லீலா கச்சேரி செய்து துர்கா பாய் தேஷ்முக் அவர்களிடம் பாராட்டையும், பரிசையும் பெற்றார். பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார். 1948ல் திரைத்துறையில் நுழைந்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இளையராஜாவின் இசையில் கற்பூர முல்லை என்ற படத்திற்காக “ஸ்ரீசிவ சுத பத கமல” என்ற பாடலைப் பாடினார்.
இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.


