பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் பரவி வரும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபகாலமாக, பிரபல தனியார் வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ‘Bank Securities’ என்ற பெயரில் போலியான முதலீட்டுத் திட்டங்கள் மூலம் இணைய மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
மோசடியாளர்கள் முதலில் பொதுமக்களை வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் இணைக்கின்றனர். அந்தக் குழுவில் உள்ள சில போலி நபர்கள், தங்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் (Screenshots) பகிர்ந்து பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, உண்மையான வங்கிச் செயலிகளைப் போலவே தோற்றமளிக்கக்கூடிய போலி மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி, அதில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இந்த போலித் தளங்களில் வங்கியின் இலச்சினை (Logo), முகப்புப் பக்கம் (Dashboard) மற்றும் வாடிக்கையாளர் சேவை (Customer Support) போன்ற வசதிகளும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும்.
அதிக லாபம் கிடைக்கும் என நம்பி பொதுமக்கள் பெரும் தொகையை முதலீடு செய்கின்றனர். பின்னர், முதலீடு செய்த பணத்தையோ அல்லது அதற்கான லாபத்தையோ திரும்பப் பெற முயற்சிக்கும்போது, “கூடுதல் பணத்தைச் செலுத்தினால் மட்டுமே மொத்த லாபத்தையும் எடுக்க முடியும்” என்று கூறி மோசடியாளர்கள் மேலும் பணத்தைப் பறிக்கின்றனர்.
பாதுகாப்பு வழிமுறைகள்
பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
சமூக ஊடக விளம்பரங்கள்: வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரங்களையோ, அவற்றில் வரும் இணைய இணைப்புகளையோ (Links) நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடுகளைச் செய்ய வேண்டும். முறையான முதலீடுகளுக்கு ‘டீமேட்’ கணக்கு அவசியம். டீமேட் கணக்கு இல்லாமலேயே முதலீடு செய்யலாம் என்று வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். உங்களது டீமேட் கணக்குகளை செபி (SEBI) அங்கீகரித்த தளங்களில் மட்டுமே இணைக்க வேண்டும்.
வங்கியின் பெயரில் வரும் திட்டங்கள் குறித்து சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்றோ அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புகார் அளிக்கும் முறை
இணையவழி நிதி மோசடிகளில் சிக்கிக்கொண்டால், பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உடனுக்குடன் புகார் அளிப்பதன் மூலம் மேலும் நிதி இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


