காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் ஆலின் (19). காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆலினுக்கு வீட்டில் திருமண வரன் பார்த்ததாகவும், அது பிடிக்காததால் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆலின் குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து கதவைப் பூட்டிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். இத்தகவல் அறிந்த ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் தங்கராஜ், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


