தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.05.2026), மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் எபோலா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
தற்போது மேலை நாடுகளில் பரவிவரும் எபோலா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எபோலா பாதிப்பு சந்தேகத்தின் பேரில் வருபவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 06 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளைத் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் கூட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் யாழினி (தூத்துக்குடி), வித்யா (கோவில்பட்டி), தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் பத்மநாபன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் அனுப், சுகாதாரத் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், வ.உ.சி துறைமுக மருத்துவ அலுவலர் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்று ஆலோசனைகளை மேற்கொண்டனர்.


