தூத்துக்குடியில் வரலாறு காணாத அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 17, 18 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை எங்கும் பதிவாகாத அளவிற்கு 13 மணிநேரம் தொடர்ந்து பெய்த பெரும் மழை மற்றும் வெள்ளம் மக்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.
இதிலிருந்து படிப்படியாக தூத்துக்குடி மாநகரம் மீண்டு வருகிறது. தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உப்பளங்கள் என அனைத்தும் அதிகனமழை பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இரவு நேரம் பெய்த மழையால் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான வீடுகளில் மழை, வெள்ளநீர் புகுந்ததால் மின்மோட்டார், இரு சக்கர வாகனங்கள், கிரைண்டர், வாஷிங்மெசின், பிரிட்ஜ், கட்டில், பீரோ, தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், ஆடைகள், உணவுப் பொருட்கள், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்ற அனைத்து பொருட்களும் பெரும் சேதமடைந்துள்ளது.
மேலும் ஆடுகள், மாடுகள், கோழி போன்ற கால்நடைகளும் இரவு நேரத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தில் மூழ்கியும், அடித்து செல்லப்பட்டும் உயிரிழந்துள்ளன. வீடுகள் இடிந்தும் உள்ளன. மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஏராளமான வீடுகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியிருந்ததால் நிவாரண முகாம்களிலும் வீட்டை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கும், வேறு இடங்களுக்கும் குடி பெயர்ந்துள்ளனர்.
உயிரிழப்பை தவிர்க்க மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்தனர். தொலைபேசி இணைப்புகளும் கிடைக்காததால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து சுகாதார பணியாளர்களும் இதர துறையினரும், அரசியல் கட்சியினரும், தன்னார்வாளர்களும், அமைப்புக்களும் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் சென்று பணியாற்றி வருகின்றனர். மேலும் மீட்பு நிவாரண உதவிகளையும் செய்து வருகின்றனர். படிப்படியாக இயல்பு நிலைமைக்கு திருப்பி வருகிறது.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6000 மற்றும் கால்நடை உயிரிழப்புகளுக்கும், பயிர் சேதத்திற்கும் அறிவித்துள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து குடியிருக்கும் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு பிற ஆவணங்கள் மூலம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
ஆயினும் பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசிய பொருட்களான மின்மோட்டார், இருசக்கர வாகனங்கள், பிரிட்ஜ், வாஷிங்மெசின், கட்டில் போன்ற பொருட்களும்பாதிக்கப்பட்டுள்ளதால் மீளமுடியாத நிலைமையில் உள்ளனர். எனவே தமிழக அரசும், ஒன்றிய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என மாநகர செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.


