
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டு போப் பிரான்சிஸ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். நேற்று முனதினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
3-வது நாளாக நேற்றும் போப் ஆண்டவரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது. பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப்படுகிறது. பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில்,தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்கு தந்தை ஸ்டார்வின் பரிந்துரையின் பெயரில் கொடிக்கம்பத்தில் பாப்பரசர் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.