தூத்துக்குடி மாநகராட்சியில், ‘முத்து நகரின் பசுமைப் பயணம்’ திட்டத்திற்கான பங்குதாரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியைப் பசுமையுடன் கூடிய எழில்மிகு நகரமாக உருவாக்கவும், நகரின் வாழ்வியல் தரத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ள ‘முத்து நகரின் பசுமைப் பயணம்’ திட்டத்திற்கான பங்குதாரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை, போக்குவரத்து, தொழில்துறை எனப் பல்வேறு தளங்களில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும், வருங்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டும் நகரை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் ‘முத்து நகரின் பசுமைப் பயணம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வ உ சி துறைமுகப் பொறுப்புக் கழகம், மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள், வர்த்தகச் சங்கப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர், பசுமைத் திட்டத்திற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், அதன் பராமரிப்பு மற்றும் தொடர் கண்காணிப்பை உறுதி செய்வதிலும் ஒரு கூட்டு டிஜிட்டல் அடித்தளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் ஆலோசனைகளையும், பங்களிப்புகளையும் தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ வழங்க வழியேற்படும்.
இத்திட்டத்தின் கீழ் மரங்களை நடுதல், பூங்காக்களைப் பராமரித்தல், பொதுச் சுவர்களில் வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்துதல், விழிப்புணர்வு வாசகங்களை எழுதுதல், சாலையில் உள்ள தூசிகளை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்தல், மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற வழிவகை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள், இடுகாடுகளை உயர் தரத்தில் பராமரிப்பது மற்றும் விளம்பரப் பேனர்கள் வைப்பதற்குப் பாதுகாப்பான அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற உள்கட்டமைப்புப் பணிகளில் பங்குதாரர்கள் தங்களது பங்களிப்பை வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆணையரின் இந்த அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தனியார் மற்றும் அரசுத் தரப்புப் பங்குதாரர்கள் தங்களது முழுப் பங்களிப்பையும், ஆதரவையும் வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட முயற்சிகளையும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


