
சிவகளை – ஆதிச்சநல்லூரில் காலகட்டத்தினை கண்டுபிடிக்க விஞ்ஞானி மொர்த்தகாய் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த மே 25ம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியானது துவங்கியது.
இதுவரை ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகள், எலும்பு, தமிழ் பிராமி எழுத்துக்களும், சிவகளை அகழாய்வு பணியில் தற்போது வரை 31 முதுமக்கள் தாழிகளும், அரிசி, நெல்மணிகள், எலும்பு, பற்கள் என பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது ஆதிச்சநல்லூர் , சிவகளையில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு நடத்தி வருகிறது. இந்து ஆய்வில் இந்தியாவை சேர்ந்த பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
மகரந்த பகுப்பாய்விற்காக பாண்டியசேரியில் உள்ள பிரஞ்சு நிறுவனமும், பரிணாம வளர்ச்சி மற்றும் மருத்துவ மரபியலுக்கு தெலுங்கானாவில் உள்ள ஐதாரபாத் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியியலுக்கான மையமும், தொல் மரபனு பகுப்பாய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும், உலேகவியல் ஆய்விற்காக பெங்களூரில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் இந்திய அறிவியல் வளாகமும், வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல், தொல்லியல் கோட்பாடுகள் மற்றும் முறைகளுக்காக, சென்னையில் உள்ள சர்மா மரபு சார் கல்வி மையமும், ஆளில்லா வான்வழி வாகன பகுப்பாய்விற்காக அண்ணா பல்கலைகழக தொலை உணர்வு நிறுவனமும், பூமி சார்வியல் மதிப்பாய்விற்காக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைகழகமும், காந்த அளவியல் மதிப்பாய்விற்காக நவிமும்பை யில் உள்ள இந்திய பூமி காந்தவியல் நிறுவனமும், தாதுக்கள் மற்றும் மண் பகுப்பாய்விற்காக வேலூர் தொழில் நுட்ப நிறுவனமும், உயிர் மானுடவியல் உயிர் பகுப்பாய்வு, எலும்புகளுக்கான கால கணக்கிடு செய்ய மும்பை புனோயில் உள்ள டெக்கன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை செய்து வருகின்றன.
வருகிற 30ந்தேதி க்குள் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எனவே அனைத்து துறையினரும் தொடர்ந்து ஆய்வுக்காக மாதிரி எடுக்க எடுக்க இப்பகுதி வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் பூமி சார்வியல் மதிப்பாய்விற்காக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் சார்பாக லக்னோ பழைய பீர்பால் ஆய்வு மையத்தினை சேர்ந்த விஞ்ஞானி மொர்த்தகாய் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் ஒளி உமிழ்வு மூலமாக காலகட்டத்தினை ஆய்வு செய்யவதில் வல்லுனர்.
இவர் சிவகளையில் மற்றும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் மணல்களை எடுத்து காலத்தை கண்டறிவதற்காக சிவகளைக்கு வருகை தந்தார். அவர் சிவகளையில் பரம்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள பொருட்கள் மற்றும் மணலையும், வாழ்விடப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பானைஓடுகளையும் அதே போன்று ஆதிச்சநல்லூரில் பரம்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமுக்கள் தாழியில் எடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் வாழ்விடப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் மணல்களை சேகரிக்கும் பணியை துவங்கியுள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி நிறுவனமும், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைகழகமும் இணைந்து பூவி சார்பியல் சம்பந்தமான ஆய்வுகளை செய்து வருகிறது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைகழக ஆய்வாளர் டாக்டர் ஜெயகொண்ட பெருமாள் தலைமையில் லக்னோ பழைய பீர்பால் அறிவியல் ஆய்வு மையத்தினை சார்ந்த விஞ்ஞானியான நான் இன்று ஆய்வு செய்ய வந்துள்ளேன். சிவகளை பரம்பு பகுதி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை சேகரித்து அதனை ஆய்வு செய்வதன் மூலம் இந்த பொருட்கள் அனைத்தும் ஒளி உமிர்வு மூலம் காலத்தை கணிக்க முடியும். அதற்காக மணல் மாதிரி, புதைந்த தாழிகள் மற்றும் ஓடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். கொடுமணல், கீழடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம். தனிப்பட்ட முறையில் நான் கொற்கையில் ஆய்வு செய்து வருகிறேன். கொற்கை துறைமுகம் 2 ஆம் நூற்றாண்டு வரை புகழ் பெற்று இருந்தது. மார்க்கபோலா இங்கு வந்து இறங்கும் போது 13 ம் நூற்றாண்டு. அவர் இறங்கிய இடம் காயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காயல் பழைய காயலாக இருக்கும் என ஆய்வு செய்து வருகிறேன். இந்த ஆய்வு 50 சதவீதம் முடிந்துவ ட்டது. கொற்கை துறைமுகம் ஏன் கைவிடப்பட்டது. எப்போது கைவிடப்பட்டது என்ற ஆய்வு அது. இதில் கொற்கை துறைமுகத்துக்கு கப்பல் வந்த காலத்தில் தண்ணீர் இருந்த அளவு உள்பட சோதனைகள் நடத்தியுள்ளேன். விரைவில் அதன் முடிவு அறிவிக்கப்படும். ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, கொடுமணல் முடிவானது 6 மாதம் முதல் 1 வருட காலத்தில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விஞ்ஞானி ஏற்கனவே தாமிரபரணி ஓட்டம் மற்றும் தேரிக்காட்டில் மணல் படிந்த காலம் 24 ஆயிரம் ஆண்டு பழமையானது என கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
விஞ்ஞானி மொர்த்தகாய் சிவகளையில் மாதிரி எடுக்கும்போது ஆய்வாளர் தங்கதுரையும், ஆதிச்சநல்லூரில் ஆய்வு எடுக்கும்போது தொல்லியல் இயக்குனர் பாஸ்கர் ஆய்வாளர் லோகநாதனும் உடன் இருந்தனர்.