தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பார்சல்கள் அனுப்பும் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின்கீழ், திருச்செந்தூர் சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் (DAK GHAR NIRYAT KENDRA) 2022ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஏற்றுமதியாளர்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
“அஞ்சலக ஏற்றுமதி மையம்” ஏற்றுமதியாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது. இந்த மையங்கள் ஏற்றுமதி தொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் அவர்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமூகமான செயல்பாடுகளை உறுதிபடுத்தவும் உதவுகின்றன.
வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பார்சல்களின் விபரங்களைத் தாங்களே எளிமையான முறையில் ஆன்லைனில் உள்ளீடு செய்த பின் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மூலமாக, ஏற்றுமதி பார்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் புக்கிங் குறித்த விவரங்களை ஆன்லைனிலேயே Foreign Post அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் வசதியும் இதில் அடங்கும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பார்சல்கள் அனுப்பும் இந்த சேவையை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு வணிக மேலாளரை 9942693129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


