கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில், பொதுத் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா 1,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகளில் பள்ளி அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தலா 1,000 ரூபாய் மதிப்பிலான அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில், கடந்த மே 15-ஆம் தேதி முதல் வரும் மே 26-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும், நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தவும் ஒரு உன்னத முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டது.
இதன் கீழ், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊத்துப்பட்டி, காளாம்பட்டி, இளையரசனேந்தல், வில்லிசேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி அரசு பள்ளிகளில் படித்துச் சாதனை படைத்த 10 மாணவ-மாணவிகளுக்கு தங்களுக்கு மிகவும் பிடித்தமான தலா 1,000 ரூபாய் மதிப்பிலான பொதுஅறிவு, அறிவியல் மற்றும் இலக்கியப் புத்தகங்களைத் தாங்களாகவே தேர்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும், நகர்மன்றத் தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்த தலா 1,000 ரூபாய் மதிப்பிலான புத்தகப் பரிசுகளை வழங்கி, அவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி குறித்துப் பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் அருண், பேராசிரியர்கள் செல்வலட்சுமி, பிரியங்கா, கோகிலா, ஸ்ருதி, ரமேஷ் மற்றும் அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் முனியசாமி, முருகசரஸ்வதி உட்படப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாகத் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி நன்றி கூறினார்.


