தேசிய மாணவர் படை (NCC) சார்பில் ‘கடலுக்கு போவோம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் ‘கடல் படகோட்ட பயணம் 2026’ என்ற சாகசக் கடல் பயண நிகழ்ச்சி தூத்துக்குடியில் உற்சாகமாக நடைபெற்றது.
தேசிய மாணவர் படை சார்பில் நடத்தப்பட்டு வரும் இச்சாகசப் பயணத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள என்.சி.சி. கடற்படைப் பிரிவைச் சேர்ந்த 21 மாணவர்கள் சிறப்புப் பயிற்சிக்குப் பின் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 27-ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்கிய இந்தச் சாகசப் பயணம், கன்னியாகுமரியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாகத் தூத்துக்குடியிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நேற்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சாகசக் கடல் பயண விழாவிற்கு தமிழ்நாடு 3-வது கடற்படைப் பிரிவு கமாண்டர் கேப்டன் டேவிட் இளங்கோவன் தலைமை தாங்கி, கொடியசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
படகுப் பயணம்: தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 2 படகுகளில் உற்சாகமாகக் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் ஒரு படகில் இந்தியத் தேசியக் கொடியைக் கம்பீரமாக ஏந்திச் சென்றனர். கடலில் சாகசம்: சுமார் 2 மணி நேரம் ஆழ்கடலில் திறம்படப் பயணித்த மாணவர்கள், பின்னர் பத்திரமாகக் கரைக்குத் திரும்பினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தேசிய மாணவர் படை மாணவர்களால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படைக் கப்பல் மாதிரிகள் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் செந்தூர்சன் (கமாண்டர், தமிழ்நாடு 5-வது கடற்படைப் பிரிவு) ஷோவன் குமார் சந்த்ரா (கமாண்டர், தமிழ்நாடு 29-வது பட்டாலியன்) மற்றும் என்.சி.சி. அலுவலர்கள், மாணவர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


