தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாள்களில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, தூத்துக்குடி மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (டிச.17) மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
மீன்வளத் துறையின் அறிவிப்பு காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 300 விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பாதுகாப்பான அருகே உள்ள கடல் பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


