தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு மற்றும் பூ சந்தை பகுதிகளில், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய வணிக மையங்களான ஜெயராஜ் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பூ சந்தை பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், கடைகளின் நீட்டிப்புகள் மற்றும் தள்ளுவண்டிகளால் சாலைகள் குறுகலாகி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் அதே பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யும் கடை உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணம்மாள் கல்லூரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அல்லது விதிமுறைகளை மீறி விளம்பரப் பலகைகள் வைப்பது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்து விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும் அமைகின்றன. எனவே, விளம்பரதாரர்கள் மற்றும் பொது அமைப்புகள் உரிய அனுமதி பெற்ற பின்னரே விளம்பரப் பலகைகளை நிறுவ வேண்டும்.
மாநகரை அழகுபடுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


