பன்னாட்டுக் குடும்ப நாள் அல்லது உலகக் குடும்ப நாள் என்பது ஆண்டுதோறும் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படும் நிகழ்வாகும். 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இதற்கான தீர்மானத்தை (A/RES/47/237) உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் முகமாக நிறைவேற்றியது. குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் புள்ளிவிவர செயல்முறைகள் குறித்த அறிவை அதிகரிக்கவும் இப்பன்னாட்டு நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டுக் குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


