
இருப்பிடச் சான்றிதழ், விவசாய வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ–சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் பல சான்றிதழ்கள்: மேலும், விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்குப் பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் ஆகிய 15 சான்றிதழ்களை இந்த வசதி மூலம் பெறலாம்.
பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பொதுச்சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும்போது விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விவரம் அவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய பொதுமக்கள் ‘155250’ என்ற எண்ணுக்கு தங்களது விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ அறிந்து கொள்ளலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்த குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் விண்ணப்பதாரர் இணையதளத்தில் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள அரசு பொதுச்சேவை மையம் மூலமாக சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
அம்மா செயலி: நில ஆவணங்களை செல்லிடப்பேசி மூலம் எளிதாக இணையதளத்தில் பெறும் வகையில் அம்மா செல்லிடப்பேசி செயலியின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த செயலியை பொதுமக்கள் தங்களது ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தச் செயலியின் மூலம் அ–பதிவேடு, சிட்டா, பட்டா மாறுதல் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை நிலை அறிதல், சம்பந்தப்பட்ட நிலமானது அரசு நிலமா அல்லது தனியார் நிலமா போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.