தாய்ப்பால் கொடுத்தால் மரபு சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படும் தாய்ப்பால் வார விழாவில் எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் தெரிவித்தார்.
தூத்துக்குடி பாத்திமா நகர் நகர் நல மையத்தில் எம்பவர் இந்தியா மற்றும் இன்னர் வீல் அமைப்பு சார்பில் உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி இன்னர் வீல் அமைப்பு தலைவி செல்வி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் தினேஷ் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் மற்றும் எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் கூறியதாவது : உலக சுகாதார அமைப்பு பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கட்டாயமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் மாப்பொருள், புரதம், நீர் அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவில் கலந்துள்ளது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பெண்களுக்கு ரத்த சோகை நோய், மார்பகப் புற்று நோய், சினைப்பை புற்று நோய் ஏற்படாது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கிய உணவுகள் என விளம்பரப்படுத்துவதை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு மாற்றாக சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
முன்னதாக எம்பவர் இந்தியா சார்பில் தாய்ப்பாலே சிறந்தது என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி இன்னர் வீல் அமைப்பு தலைவி செல்வி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் தினேஷ் வரவேற்புரையாற்றினார். எஸ்.ஏ.ஹெச் நர்சிங் பள்ளி மாணவிகள் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த நாடகங்களை நடித்துக் காட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் அமைப்பு தலைவி ஜீடி உட்பட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


