ஆலங்குளத்தில் காவல் துறையினரால் சுடப்பட்ட மணிகண்டனின் மனைவி, நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில், கடந்த 07.04.2026 அன்று உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா என்பவரால் மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டனின் மனைவி பொன்மணி மணிகண்டன் கூறியதாவது: “எனது கணவரைச் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்குத் தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
மேலும், எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இதுவரை எங்களுக்கு எந்தவித நீதியோ, உதவியோ கிடைக்கவில்லை. எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மே 26-ஆம் தேதி ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பாகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன்,” என தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


