தமிழக அரசு சார்பில் 2ஆம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 4,042 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் வரவேற்றார். வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதா ஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நிதி உதவியை வழங்கினர்.
விழாவில், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, துணை ஆட்சியர் மகேந்திரன், பயிற்சி ஆட்சியர் புவனேஷ்ராம், எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கேண்டயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் சாதனையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மகுடமாக ஜொலிக்கிறது. லண்டன் கிங்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில், உணவுக்காகவும் மருத்துவ செலவிற்காகவும் 40 சதவீத பெண்கள் மகளிர் உரிமைத் தொகையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. மாநிலத் திட்ட குழு ஆய்வில், மகளிர் தொழில் தொடங்குவதற்கும், 70 சதவீதம் பெண்கள் சிறுதொழில் போன்றவற்றுக்கும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது என்றார்.


