விளாத்திகுளத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நூலகம்,மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன, இந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக உள்ளதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் காவல்துறை உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வருமாறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.


