
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தில் தொட்டில் என அழைக்கப்படுகிறது. உலக அளவில் மிகவும் புகழ் பெற்றது. தமிழரின் நாகரீகம் என போற்றப்படும் இந்த இடத்தில் இந்தியாவிலேயே முதல் முதல் சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த மியூசியம் கடந்த ஆகஸ்ட் மாதம் கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். துவங்கிய நாள் முதல் இவ்விடத்தினை பார்வையிட உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக இவ்விடத்தில் கடந்த மாதம் குவைத்தில் இருந்து அங்கு வாழும் தமிழர்கள் குடும்பத்துடன் வந்தனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் இந்த சைட் மியூசியம் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இங்கிருந்த 2600 வருட பழமையான மனித எலும்பு கூடு உள்பட பல பொருள்கள் பாதுகாப்பாக எடுத்துச்சென்று விட்டனர். இங்கு பாதிக்கப்பட்ட இடங்களை சீர் செய்யும் பணி ஆமை வேகத்தில் நடந்தது. மேலும் சி சைட்டில் நடைபெறும் பணிகள் பாதியிலே விடப்பட்டு பணியாற்றிய ஆய்வாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இங்கு வேலை பார்த்த தோட்டப்பணியாளர்கள் உள்பட பணியாளர்கள் நிறுத்தப்பட்டு விட்டனர். இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு படி மீண்டும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஆய்வுகள் நடைபெறவில்லை.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து சுற்று பயணம் வந்த முனைவர் ரமேஷ் ரத்தினகுமார் தனது குடும்பத்துடன் ஆதிச்சநல்லூர் வந்தார். அங்கு அவர் பி சைட் மற்றும் சி சைட் போன்றவற்றை பார்த்தார். இவருக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தில் பணிபுரியும் வெங்கடேஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புதூரை சேர்ந்த அவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்தோடு மென்பொறியாளராக வசித்து வருகிறார். இவர் ஆதிச்சநல்லூரை பார்வையிட்டு விட்டு கூறியதாவது.
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் உள்ளது உள்ள படியே அமைந்துள்ளது. இது மிகவும் விசேஷமாக உள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களான எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அதுவும் இந்தியாவிலேயே முதன் முதலாக சைட் மியூசியம் தமிழரின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ளது என நினைத்து சந்தோசப்பட்டோம். இதை காண ஆதிச்சநல்லூருக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவரும் வருகை தருகிறார்கள். ஆனால் இந்த சைட் மியூசியத்தினை திறக்கும் போது நாங்கள் புகைப்படத்தில் பார்த்தபடி தற்போது இல்லை . தோட்ட பராமரிப்பு இல்லை. சைட் மியூசியத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் கூட சீர் செய்யப்படவில்லை. மேலும் சி சைட்டில் கூரை காற்றில் சேதமடையும் நிலையில் உள்ளது. இங்குள்ள பொருள்கள் பாதுகாப்பின்றி கிடக்கிறது. பார்வையாளர்கள் குழிக்குள் விழுந்து விடாமல் இருக்கவும் நடவடிக்கை இல்லை. எனவே மிகப்பெரிய வரலாற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிச்சநல்லூர் மியூசியத்துக்கு கூடுதல் பணத்தினை மத்திய நிதி அமைச்சர் ஓதுக்கீடு செய்ய வேண்டும். என்று அவர் கூறினார்.
சுமார் 150 வருடங்களாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்தும், தொடர்ந்து இங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியும், நிறைவு பெறாமல் அறை குறையாக இருப்பது உலக தமிழர்கள் மத்தியிலேயே வேதனை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆதிச்சநல்லூரில் இடையில் விடப்பட்ட பணிகளை முடித்து தொடர்ந்து பி மற்றும் சி சைட்டில் விடுப்பட்ட சைட் மியூசிய வேலைகளை செய்ய வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.