தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு ” குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சார்பில், “மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பானது நேற்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ப. கிறிசோலைட் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள், பதப்படுத்துதல் முறைகள், பொருளாதாரம், சந்தைப்படுத்தல், மதிப்புச் சங்கிலி மேலாண்மை, தடமறிதல், ஊட்டச்சத்து பகுப்பாய்வு, மற்றும் மீன் பொருட்களின் பாதுகாப்புக் காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்களின் ஊட்டச்சத்து பகுப்பாய்வு தொடர்பான செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இப்பயிற்சி உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கோ. அருள் ஓளி, உதவிப் பேராசிரியர் வெ. கோமதி, மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியர்கள் பூ. மணிகண்டன், மற்றும் த. ஐயப்பன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 41 மாணவியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு தொடர்பான பயனுள்ள அறிவு மற்றும் செய்முறைத் திறன்களைப் பெற்றனர்.


