திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசன நேரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சமீபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையில், கட்டண தரிசனத்தில் மாலை 6:30 மணி வரையிலும், பொது தரிசனத்தில் இரவு 7:00 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாக இரவு 9:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தத் திடீர் நேரக் கட்டுப்பாடு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பழைய நடைமுறைப்படியே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் எழுந்தன. பக்தர்களின் இந்த அதிருப்தியைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பழைய அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, தளர்வுகளுடன் கூடிய புதிய நேர ஒதுக்கீடு அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின் விவரங்கள்:
தினசரி நடை திறப்பு: தினமும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இரவு நேரக் கட்டுப்பாடு: இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 4:00 மணிக்கே நடை திறக்கப்பட்டுப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
விசேஷ நாட்கள்: விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது.


