கோவில்பட்டியில், வந்தே பாரத் ரயிலில் ரூ.10½ லட்சத்துடன் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் கிழக்கு காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயிலில் திருநெல்வேலி கோட்ட பாஜக கிளஸ்டர் பொறுப்பாளர் நீலம் முரளி யாதவ் பயணித்தார். ரயில் நேற்று காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் வந்தபோது அதில் 15 போலீசார் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். நீலம் முரளி யாதவின் பையை சோதனையிட்டபோது அதில் ரூ. 10.50 லட்சம் பணம், அதற்குரிய ஆதாரங்களும் இருந்ததாம்.
இதற்கிடையே ரயில் கோவில்பட்டி வந்ததும் போலீசார் அவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். தகவல் அறிந்ததும் திருநெல்வேலி கோட்ட பாஜக தேர்தல் பணி அமைப்பாளர் சுரேஷ், கோவில்பட்டி நகர முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிடிபட்ட பணத்துக்கு உரிய ஆதாரங்கள் இருந்ததால் போலீசார் அவரை விடுவித்தனர்.
போலீசார் விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த நீலம் முரளி யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது பையை போலீசார் சோதனை செய்ததில் ரூ.10.50 லட்சம் பணமும், அதற்குரிய ஆவணங்களும் இருந்தன. திருநெல்வேலி கோட்டத்தில் டிச. 12, 13, 15 ஆகிய தேதிகளில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து எஸ்.ஐ.ஆர். தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது.
இதற்கான செலவுக்கு நான் கொண்டுவந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பணத்துக்கு முறையான ஆவணங்கள் இருந்ததும் அதை என்னிடம் ஒப்படைத்துவிட்டனர். பாஜக நிர்வாகிகளை திமுக அரசு ஒடுக்க நினைக்கிறது. வரும் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்.


