உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கக் கோரி, ‘அனைத்து விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்’ சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கயத்தாறு வட்டாரத்தில் கடந்த 2025-2026 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மாற்றம் மற்றும் சாதகமற்ற வானிலை காரணமாக, விவசாயிகள் பயிரிட்டிருந்த உளுந்து பயிர்கள் முழுமையாகப் பாழடைந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஏற்கனவே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். உளுந்து சாகுபடிக்காகச் செய்த செலவுகள் அனைத்தும் வீணாகி விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய பயிர் காப்பீட்டுத் தொகை விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். என மாவட்ட நிர்வாகம் உரிய விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


