தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பளத் தொழிலாளர்களை அச்சுறுத்தி, அவமரியாதை செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ‘உப்புத் தொழிலாளர் சங்கம்’ சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, பழையகாயல் பகுதிகளில் உள்ள சுமார் 6,000 ஏக்கர் நிலங்களில் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளைக் கையகப்படுத்திக் கப்பல் கட்டும் தளம் அமைக்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முள்ளக்காடு வருவாய் கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா என்பவர் மீது உப்பளத் தொழிலாளர்கள் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். ஆய்வு என்ற பெயரில் உப்பளங்களுக்குச் சென்று, “இனி இங்கு வேலை செய்யக்கூடாது, இடத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டோம்” எனத் தொழிலாளர்களை அராஜகமாக மிரட்டி வருகின்றார்.
இங்கு உப்பளத் தொழிலாளர்கள் எவருமே இல்லை எனத் தவறாகத் தகவல் தெரிவித்து, தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் ஆன்லைன் பதிவுகளை ரத்து செய்துள்ளார். இதனால் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பயன்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் புகார் அளித்து அச்சுறுத்தி வரும் குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான அதிகாரியை நியமித்து அப்பகுதியில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. பொன்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


