விளாத்திகுளம் பேரூராட்சியில் 14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பூங்காவில் பழுதான விளையாட்டு உபகரணங்களால் சிறுவர்கள் காயம் அடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு சார்பில் அம்பாள் நகர் முத்து பூங்கா பல ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேடை, கழிவறை வசதி அமைக்கப்பட்டது.
இந்தப் பூங்காவிற்கு விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் உள்ள 10,000 மேற்பட்ட மக்கள் மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் குழந்தைகள் என விடுமுறை தினங்களை பூங்காவில் வந்து நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.
அவ்வாறு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பல ஆண்டுகளாக பழுதாகி உடைந்த நிலையில் தற்போது வரை அதை சரி செய்யாமல் இருப்பதால், விளையாட்டு உபகரணங்களில் விளையாடக்கூடிய சிறுவர்களுக்கு அடிக்கடி கை, கால்களில் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளத்தை சேர்ந்த ஒரு சிறுவன் எதிர்பாராத விதமாக மின்கம்பியை தொட்ட போது, மின்சாரம் தாக்கி பூங்காவிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும், பூங்காவின் பராமரிப்பிற்காக மாதம் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணம் எடுப்பதாகவும் அவ்வாறு எடுக்கப்படும் பணம் முறையாக பூங்க பராமரிப்பிற்கு செலவிடப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் பூங்கா வளாகத்தில் மின்கம்பங்களை தொடாதீர்கள் என்று அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது, பூங்கா வளாக வெளிப்பகுதியில் இருந்த ஆழ்துளை அடி பம்பை அகற்றி அதற்கு மாற்றாக மின்சார பம்பு அமைக்கப்பட்டுள்ளது அந்த மின்சாரபம்பு எதற்கு அமைக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது, பூங்காவில் உள்ள கழிவறைகள் வெறும் காட்சிப் பொருளாகவே வைக்கப்பட்டுள்ளது தவிர,கழிவறையை பராமரிப்பதற்கு நேரமில்லாத காரணத்தினால் கழிவறையை காட்சிப் பொருளாகவே மட்டும் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் 14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இந்த பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


