
பசுவந்தனை கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 1-ந்தேதி காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் கட்டளைதாரர் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடக்கிறது. 9-வது திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடந்தது.
காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். காலை 10.25 மணிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பசுவந்தனையை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிராம மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் ஊரின் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து பகல் 11.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
10-வது நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) தீர்த்தவாரியும், 11-வது நாள் விழாவான நாளை(ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாளுக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.