உலமாக்களுக்குப் புதிய இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் ரூ. 50,000 மானியத் திட்டத்திற்கான விண்ணப்பக் கால அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் அரபி ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முன்னதாக 30.06.2026-டன் முடிவடைந்த நிலையில், கூடுதலாக 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற விரும்பும் தகுதியான பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற வேண்டும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி புதிய இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 15.07.2026-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


