அனுராதா ஸ்ரீராம் (பிறப்பு: 9 ஜூலை 1970), தமிழகத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இசையின் செல்லக்கிளி என்றும் கொஞ்சும் குயில் என்றும் குறிப்பிடப்படும் இவர் 90-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அனுராதா ஸ்ரீராம், மீனாட்சி சுந்தரம் -ரேணுகா தேவி தம்பதியின் மகளாகப் பிறந்தார்.[1] அம்மா பின்னணிப் பாடகியாக இருந்தவர். ‘கந்தன் கருணை’யில் ‘ஆறுமுகமான பொருள்…’ பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ஒலிக்கும் குரல் அவருடையதுதான். அனுராதா தனது 6-ஆவது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார். ‘காளி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்[2] இவர். 12 வயது வரை இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் கச்சேரி செய்தார். தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன், டி. பிருந்தா, பண்டிட் மணிக்பா தாகூர்தாஸ் ஆகியோரிடம் சங்கீதம் கற்றவர் இவர். நியூயார்க்கில் பேராசிரியர் ஷிர்லி மீயரிடம் ஓபெரா இசையைக் கற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பின்போது தங்கப்பதக்கம் வாங்கியவர்.
அனுராதா ஸ்ரீராம் தமிழ் திரைப்படத்துறையின் வாயிலாக அறிமுகமானார். இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த “மலரோடு மலர் இங்கு” என்ற பாம்பே திரைப்படப் பாடலின் வாயிலாக அறிமுகமானார். இவர் இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை முதன்முதலில் தனித்துப்பாடினார். அதன்பிற்கு மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற மழையிலே பாடல், ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தேவா இசையில் ‘வாலி’ படத்தில் இவர் பாடிய ‘நிலவைக் கொண்டு வா.பாடல் மெல்லிசையும் துள்ளலும் கைகோர்த்த இசைக்குரல் வடிவமாக அமைந்தது. ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் பாடிய ‘கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு.பாடல், கருப்பாக இருப்பதை தாழ்வு மனப்பான்மையோடு உணரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பாராட்டையும் நன்றியையும் அனுராதாவுக்கு வாங்கிக் கொடுத்தது. ‘குஷி’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன்.இளையராஜா இசையில் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் ஜேசுதாசுடன் பாடிய ‘ஒருநாள் ஒரு கனவு. ஹரிஹரனுடன் பாடிய ‘ரோஜா பூந்தோட்டம். சொக்கத்தங்கம்’ படத்தில் ‘என்ன நெனச்சே நீ என்ன நெனச்சே. ‘கில்லி’யில் ‘அப்படிப்போடு போடு.தினா இசையில் ‘திருப்பாச்சி’ படத்தில் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பாடிய ‘அப்பன் பண்ணுன தப்புல.. இமான் இசையில் ‘கிரி’ படத்தில் ‘டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா.பரத்வாஜ் இசையில் ‘ஜெமினி’ படத்தில் ‘ஓ போடு ஓ போடு.ஆதி’ படத்தில் ‘ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு.போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய கணவர் ஸ்ரீராமுடன் இணைந்து “ஃபைவ் ஸ்டார்” திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
- சிறந்த பின்னணிப் பாடகிக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது[5] ஜெமினி (திரைப்படம் (2004)
- சிறந்த பெண் பிண்ணனிப் பாடகருக்கான தமிழ்நாடு அரசு விருது (1996)
- டாக்டர். ஜெ. ஜெயலலிதா திரைப்பட விருது (1996)
- சிறந்த பெண் பிண்ணனிப் பாடகருக்கான அஜந்தா விருது (1996)
- சிறந்த இசைத் தொகுப்பிற்கான வீடியோகோன் திரை விருது (1998)
- சிறந்த பின்னணிப் பாடகருக்கான கர்நாடக மாநில அரசின் திரைப்பட விருது (1999)
- கோயம்புத்தூர் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் மூலம் தொழில் நுட்ப சிறப்பு விருது(2002)
- சர்வதேச தமிழ் திரைப்பட விருது (2003)
- சிறந்த பின்னணிப் பாடகருக்க்கான மேற்கு வங்காள மாநில விருது (2004)
- இசைத்துறையில் பங்களித்ததற்காக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது (2006)
- இசைத்துறையில் அவரின் பங்களிப்பிற்காக சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் (2012)


