தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன், நேற்று மாலை தனது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குட்பட்ட பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், மீனவர் காலனி, விவேகானந்தர் காலனி, கோமதிபாய் காலனி மற்றும் ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இந்தப் பிரச்சார நிகழ்வின் போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வி. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் தனலட்சுமி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் யூசுப் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வட்டச் செயலாளர்கள் தெய்வேந்திரன், சந்தன மாரிமுத்து, சுரேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று வாக்குச் சேகரித்தனர். செல்லும் இடமெல்லாம் வேட்பாளர் கீதா ஜீவனுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


