தூத்துக்குடி, ஏரல், விளாத்திகுளம் வட்டங்களில் ஆகஸ்ட் 12ஆம் தேதி உப்பளத் தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழிலான உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பேணிக் காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு சேவை முகாம்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்துத் தரப்பினருக்கும் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், உப்பளத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வருவாய்த்துறை, பொதுவிநியோகத் திட்டம், அடையாள அட்டைச் சேவைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS), மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னோடி வங்கி மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உப்பளத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் முதற்கட்ட முகாம்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, 12.08.2026 அன்று ஏரல் வட்டத்தில் அன்னை பரிபூரண மக்கள் மன்றம் பழையகாயல், தூத்துக்குடி வட்டத்தில் பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலக வளாகம், முள்ளகாடு-02, விளாத்திகுளம் வட்டத்தில் முனியசாமி கோவில் மண்டபம் மேல்மந்தை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாமினை உப்பளத் தொழிலாளர்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களில் பயனுற்று மற்றும் சான்றிதழ்களை பெற்று பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.


