தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் சேவை மற்றும் 108 திருவிளக்கு தீப பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை வார வழிபாட்டு மகளிர் சங்கத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்புத் திருவிளக்கு தீப பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டுச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 108 திருவிளக்கு தீப பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தீபமேற்றிப் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.

அம்பிகையின் ஊஞ்சல் சேவை மற்றும் தீப பூஜையில் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இச்சிறப்புப் பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவன் கோவில் பிரதான பட்டர் செல்வம் சிறப்பாகச் செய்திருந்தார்.


