தமிழகத்தில் வருகிற 8,9ஆகிய தேதிகளில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இ-கேஒய்சி (eKYC) கைரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் வருகிற ஆகஸ்ட் 8 ,9 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மின்னணு குடும்ப அட்டை இ-கேஒய்சி (eKYC) கைரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை இ-கேஒய்சி (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு இ-கேஒய்சி (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இ-கேஒய்சி (eKYC) பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் இ-கேஒய்சி (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் இ-கேஒய்சி (eKYC) பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


