இரவீந்தரநாத் தாகூர் மே 7, 1861– ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூரைச் சேர்ந்த ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார்.[10] பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.
தாகூர் வங்காளக் கலையில் கடுமையான செந்நெறி வடிவங்களை மறு ஆக்கம் செய்து புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலைத் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் கற்பனைத்திறன், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் ,சமத்துவத்திற்காகவும் பெரிதும் புகழ் பெற்றன. சில தடை செய்யப்பட்டன. இந்தியாவில் ஜன கண மன மற்றும் வங்காளதேசத்தில் அமர் சோனர் பங்களா ஆகிய இவரின் படைப்புகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


