ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி இவர் தென் இந்திய பாளையக்கார் ஆவார் .வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான இவர் ,பாளையக்காரர் போர்களில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார் . ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம் என அழைக்கப்படும் அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சுத் திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.
இவர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். ஊமைத்துரை தப்பியதோடு ஆங்கிலேய வீரர்களைக் கொன்றதால் கானல் அக்நியூ என்பவர் 1801 மே21 இல் மிகப்பெரிய பீரங்கிப்படை. துப்பாக்கிப் படைவீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி மீது போர் தொடுத்தார்.
கோட்டை தகர்க்கப்பட்டது. தாய் மண்ணைக் காக்கும் போரில் மக்களும், பெண்களும், குழந்தைகளும் மாண்டனர். போரில் படுகாயத்துடன் தப்பினார் ஊமைத்துரை. விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கர். மருது சகோதரர்களும் இணைந்து சத்திரப்பட்டி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் மேஜர் ஜோன்ஸ் படைகளுடன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இருப்பினும் பின்வாங்கிச் செல்ல வேண்டிய நிலையே ஏற்பட்டது. இறுதியில் வத்தலகுண்டு என்ற ஊரில் வைத்து ஊமைத்துரையும் அவரது தோழர்களாகிய வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஊமைத்துரையும். துரைசிங்கமும் 1801 நவம்பர் 16இல் பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டு மாண்டனர். வாள்வீரனான ஊமைத்துரையின் விடுதலை உணர்வுகள் மக்களிடையே வளரத் தொடங்கின.
கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் அரண்மணையும் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்டது. நினைவு மண்டபமும் மற்றும் சிலைகளும் கட்டபொம்மனுக்கு அமைக்கப்பட்டுள்ளன. முதல் தற்கொலைப் படையாகத் திகழ்ந்த மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு மணி மண்டபமும், சிலையும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
ஊமைத்துரை நட்புணர்வும், மனிதாபிமானமும் கொண்டுருந்தவர் என்று வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன், தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாகக் கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்கள் இவர்கள் அனைவரிடத்தும் நட்போடு பழகி வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது
காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801இல் தூத்துக்குடி மாவட்டக் கம்பெனித் தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடிக் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து, தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாகச் செல்ல குதிரைகளுடன் இரண்டு வீரர்களையும் வழித்துணையாக அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் பற்றிய அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.


