ரயில் நிலைய கவுண்டரில் நேரில் வந்து முன் பதிவு செய்யும் டிக்கெட்டையும் ஆன்லைனில் ரத்து செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டை நேரடியாக ரயில் நிலையம் சென்றுதான் ரத்து செய்யமுடியும். ஆனால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் டிக்கெட்களை ஆன்லைனில் ரத்து செய்யும் நிலை இருந்தது. தற்போது, இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக நேரடியாக வந்து கவுன்டர்களில் முன்பதிவு செய்யும் டிக்கெட்களையும், ஆன்லைனில் ரத்துசெய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான பயணிகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைய தளமான ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்தும். முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களை, எளிதாக ரத்து செய்து பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் திரும்பப் பெற்று வந்தனர். தற்போது, ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளையும், ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தில் ரத்து செய்து, கட்டணத்தை வங்கிக் கணக்கில் திரும்பப் பெறும் வசதியை இந்திய ரயில்வே புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இதுவரையில் நேரடியாக எடுத்த முன்பதிவு டிக்கெட்டை ரயில் நிலையத்திற்கு சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் பணத்தை திரும்ப பெற்று வந்த நிலையில், இன்று ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை தங்களது வங்கி கணக்கில் பெறும் புதிய வசதி பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


