தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் தூய்மை பணியாளர்கள் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்க தலைவர்கள் பொன்ராஜ், மின்னல் அம்ஜித், சகாயம், சிவராமன் ஆகியோர் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
பீஸ்ரேட் அடிப்படையில் பணிபுரியும் தினக் கூலி தூய்மை தொழிலாளர்களை சட்ட விரோதமாக மண்டலம் விட்டு மண்டலம் தொலைதூர இடமாறுதல் செய்வதை தடை செய்ய வேண்டும். தூய்மை பணி வாகனம் பதிலி ஓட்டுநர்களுக்கு முழுமையாக மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்லேண்ட் நிர்வாகம் ஊதியத்தை முறைகேடாக பிடித்தம் செய்து கூலியில் சட்டவிரோதமான சுரண்டலை செய்து வருகிறது.
சிறிய வாகனத்தில் நின்று குப்பைகளை பெரிய வாகனத்தில் தட்டும் ஆபத்தான பெண் தொழிலாளர் வேலையை நிறுத்த நடவடிக்கை எடுத்து பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கழிவு நீரோடை அசுத்த கழிவுகளை குப்பை குவியல்களை பொக்லைன் கொண்டு அள்ளும் முறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களை நோய் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் ஒப்பந்த நிறுவனம் அவர்லண்ட் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுகிறோம். விளிம்பு நிலை கூலி பெறுகிற மேற்படித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தொழில் அமைதி காத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் கூறியதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


