தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாசரேத்தில் செயல்பட்டு வந்த திருமண்டல தேர்தல் அலுவலகம் பூட்டப்பட்டது.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதி பதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜாண் சந்தோஷம், ரத்தினராஜ் மற்றும் வக்கீல் பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்காக தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் அலுவலகம் நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி விருந்தினர் மாளிகையில் ஜுலை 21 ந் தேதி முதல் செயல்பட்டு வந்தது.
முதற்கட்டமாக வருகிற செப்டம்பர் 7ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமண்டல பெருமன்ற மற்றும் சேகரமன்ற சபை பிரதிநிதிகள் தேர்தல் அனைத்து ஆலயங்களிலும் பிரதான ஆராதனையைத் தொடர்ந்து நடைபெறுவதாக அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல், வேட்பு மனுத் தாக்கல், வாக்கு சேகரிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் செப்டம்பர் முதல் சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் கே. ரூபன் மார்க் ஆணையின் படி, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திரா ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் புதிதாக பொறுப்பேற்றார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சி,எஸ்.ஐ. மாடரேட்டர் ரூபன் மார்க் உத்தரவின் பேரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் 07.09.2025 முதல் தொடங்கி நடத்தப்படும் தேர்தல்கள் அனைத்தும் அடுத்த நடவடிக்கை வழிகாட்டுதல் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக திருமண்டல பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத் அறிவிப்பு வெளியிட்டார் .
இந்நிலையில் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வந்த தேர்தல் அலுவலகம் பூட்டப்பட்டது. மேலும் சி.எஸ்.ஐ. சினாடு பேரவை சார்பில் இத் தேர்தலை நடத்துவதற்கு நிர்வாகக் குழுவினர் நியமனம் செய்யப்பட்ட பின்னர் புதிதாக மீண்டும் தேர்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.


